tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் அனந்தன் நம்பியார் நினைவு நாள்...

1938ல் திருச்சி ரயில்வே பொன்மலைப் பணிமனையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் தோழர் அனந்தன் நம்பியார். ஆங்கிலேய அரசால்மிகக் குறைந்த ஊதியத்தில் ரயில்வே தொழிலாளர்களின் உழைப்பு ஒட்டச் சுரண்டப்பட்டு வந்த காலமது.பொன்மலை துப்பாக்கிச்சூட்டில் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்பட்டுபின்னர் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கம் கட்டும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அனந்தன் நம்பியார் தமது 24வது இளம் வயதிலேயே ரயில்வே தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரானார். தமது 28 ஆம் வயதிலேயே 1946ஆம் ஆண்டு மெட்ராஸ்சட்டசபைக்கு ரயில்வே தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1952ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரயில்வே அமைச்சர் சந்தானத்தை எதிர்த்துப் போட்டியிட்டு மாயவரம் தொகுதியில் வெற்றி பெற்றார். மீண்டும் 1962 மற்றும் 1967 தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்காகவும், அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலனுக்காகவும் வாதாடினார். பலமுறை சிறையேகியும், தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டும் இடைவிடாது இயக்கியவர் அனந்தன் நம்பியார். 50 ஆண்டுக்காலம் தொழிற்சங்கப் பணியாற்றிய அனந்தன் நம்பியார் இறக்கும் வரை பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று மரணமடைந்தார். அவரது ஆற்றலும்அர்ப்பணிப்பும் துணிவும் தியாகமும் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கிடைத்த முன்மாதிரி.